ஹிட்லரின் வாழ்கை வரலாறு

             ஹிட்லரின்   வாழ்கை  வரலாறு



இரண்டாம்    உலகப்    போரின்     
கதாநாயகனும்    வில்லனும்    ஒருவரே     
அவர்தான்    ஹிட்லர்.     
முதல்    உலகப்    போரின்போது     
ஜெர்மனி    படையில்    ராணுவ   வீரராக     
இருந்த ஹிட்லர்,     
இரண்டாம்    உலகப்போரின்    
போது    ஜெர்மனியின்    சர்வாதிகாரியாக     
விளங்கினார்.     
அவர்   பெயரைக்   கேட்டாலே     
உலகம்    நடுங்கியது.





இரண்டாம்   உலகப்போர்    மூள்வதற்கும்,    
அதன்   மூலம்   5  கோடி   பேருக்கு     
மேல்   சாவதற்கு   காரணமாக     
இருந்த   ஹிட்லரின்   வாழ்க்கை,    
பல    திருப்பங்களும்,   திடுக்கிடும்   
சம்பவங்களும்    நிறைந்தது.    
வட   ஆஸ்திரியாவில்   உள்ள   பிரானவ்     
என்ற   ஊரில்  1889-ம்   ஆண்டு    
ஏப்ரல்   20-ந்தேதி   பிறந்தவர்    ஹிட்லர்.     
இவருடைய    தந்தையின்     
பெயர்   அலாய்ஸ்   ஷிக்கிள்    
கிரப்பர்   ஹிட்லர்.     
இவர்   சுங்க   இலாகா   அதிகாரியாக    
வேலை   பார்த்து   வந்தார்.






இவருக்கு   மூன்று   மனைவிகள்.     
மூன்றாவது   மனைவியான    
கிளாராவின்   நான்காவது    
மகன்   ஹிட்லர்.    
பிறந்தது   முதலே   ஹிட்லர்     
நோஞ்சானாக    இருந்தார்.    
அடிக்கடி   காய்ச்சல்   வரும்.    
கிட்டத்தட்ட   ஒரு   வருடத்துக்குப்    
பிறகுதான்   உடம்பு   தேறியது.     
அலோய்ஸ்   கண்டிப்பான   தந்தை.     
தந்தை   சுங்க    அதிகாரியாகப்    
பணியாற்றியதால்,    
அடிக்கடி    வெளிஊர்    சென்றுவிடுவார்.     
அதனால்,   ஹிட்லருக்கு   அம்மாவிடம்    
செல்லம்   அதிகம்.    
தாய்   மீது   மிகுந்த   பக்தியும்,    
பாசமும்   கொண்டவர்   ஹிட்லர்.    
பள்ளியில்   படிக்கும்போது,     
ஹிட்லர்தான்   வகுப்பில்    
முதல்   மாணவர்.     
அலோய்ஸ்   ஹிட்லரையும்    
அரசுப்பணியில்   சேர்க்க     
விருப்பப்பட்டார்.






ஆனால்   ஹிட்லரின்   விருப்பமோ    
ஓவியராக   வேண்டும்   என்பது.     
ஹிட்லர்   படிப்பில்   ஆர்வம்   குறைந்தது.    
படம்   வரைவதில்   ஆர்வம்    ஏற்பட்டது.     
விரைவிலேயே   அழகாக   படங்கள்    
வரையும்   ஆற்றல்   பெற்றார்.    
மாணவப்   பருவத்திலேயே   நிறைய     
நாவல்கள்   படித்தார்.    
போர்கள்   பற்றிய   கதைகள்   என்றால்     
நாட்டம்   அதிகம்.




குடிப்பழக்கம்   கொண்ட   தந்தை,    
ஹிட்லரின்   தாயை   போதையில்    
ஏசுவது   ஹிட்லருக்கு   அவரின்    
மேல்   வெறுப்பை    அதிகரித்தது.     
நிதானமாக    இருந்தாலும்    குடும்பத்தினரை    
அடிமையாக   நடத்துவார்.     
ஹிட்லரையும்,   வீட்டில்   உள்ள   நாயையும்    
ஒரே   மாதிரிதான்   நடத்துவார்.     
“அடால்ப்,”   என்று   பெயர்   சொல்லி    
ஹிட்லரை   கூப்பிட மாட்டாராம்.     
அலோய்ஸ்   ஒரு   விசிலை    
எடுத்து   ஊதியதும்,   
ஹிட்லர்   ஓடிவந்து   'அட்டென்ஷ'னில்    
நிற்க   வேண்டும்.






1903-ம்   ஆண்டு,   ஹிட்லரின்   தந்தை    
இறந்து   போனார்.    தந்தையின்    
கண்டிப்பு   இல்லாமல்   வளர்ந்த    ஹிட்லர்,    
நாளுக்கு   நாள்   முரடனாக    மாறினார்.    
மாணவர்களுடன்   சண்டை    
போடுவதுடன்,    
ஆசிரியர்களுடனும்   மோதுவார்.





தனது   17-வது   வயதில்,    
பள்ளி   இறுதித்   தேர்வில்   தேறினார்.    
ஹிட்லர்   அதற்காகக்   கொடுத்த     
சான்றிதழை   வாங்கிக்கொண்டு    
வருகிற   வழியில்   நண்பர்களோடு    
சேர்ந்து   மது   அருந்தினார்.    
சர்டிபிகேட்டைக்   கிழித்தெறிந்தார்.    
இதை   அறிந்த   ஆசிரியர்,    
அவரைக்   கூப்பிட்டுக்   கண்டித்தார்.    
"இனி   என்   வாழ்நாளில்    
சிகரெட்டையும்,   மதுவையும்    
தொடமாட்டேன்"    
என்று   சபதம்   செய்தார்,   ஹிட்லர்.    
அதன்படி,   கடைசி   மூச்சு    
உள்ளவரை   சிகரெட்டையும்,     
மதுவையும்   அவர்    தொடவில்லை.






மாதாமாதம்   வரும்    அரசாங்க     
உதவிப்பணத்தில்   குடும்பம்    ஓடியது.    
பதினெட்டு   வயதானவுடன்   அம்மாவிடம்    
பணம்   வாங்கிக்கொண்டு,    
ஓவியராக   போகிறேன்   என்று    சொல்லி,     
ஆஸ்திரியாவின்   தலைநகர்     
வியன்னாவுக்கு   ரயிலேறி    விட்டார்.     
பிற்காலத்தில்   ஜெர்மனிய    வரலாற்று    
புத்தகங்களில்,    புதியதொரு    
சித்தாந்தத்தை   உருவாக்க   வேண்டும்    
என்று   ஹிட்லர்   தாயை     
பிரிந்ததாககூறப்பட்டது.     
ஆனால்    உண்மையிலேயே    
அவர்   வியன்னாவின்    'Art Academy'  யில்    
சேரவே   தாயை   பிரிந்தார்.     
ஆனால்   அதற்கான    நுழைவுத்தேர்வில்    
தோல்வி   அடைந்தார்.    
அடுத்த    வருடமும்   ஓவியப்   பள்ளியில்    
சேர   முயற்சி   செய்தார்.    
ஆனால்   இம்முறை   தேர்வில்    
கலந்து   கொள்ளவே   அனுமதியில்லை.     
அந்த   ஆண்டின்   இறுதியில்   ஹிட்லரின்    
தாயார்   இறந்து   போனார்.







அவமானங்களும்    தோல்விகளுமே    
மிகப்பெரிய    சாதனையாளர்களின்    
இளமைக்காலத்தை   நிரப்புகிறது.     
தாயின்   சேமிப்பும்,   ஒரு   வீடும்    
ஹிட்லருக்கு   வந்து   சேர்ந்தது.    
மாணவராக    இல்லையெனில்    
உதவிப்பணம்   நின்றுவிடும்   என்பதால்,    
தான்   ஒரு   மாணவர்    
எனப்   பொய்யான   சர்ட்டிபிகேட்    
தயாரித்து   உதவிப்பணம்   தொடர்ந்து    
வருமாறு   பார்த்துக்கொண்டார்.     
ஹிட்லரின்   கில்லாடித்தனம்    இங்குதான்    
முதன்முதலாக    வெளிப்பட்டது.






ஹிட்லர்   அதன்பின்   ஓவிய    
அட்டைகள்   தயாரித்து,    
பிழைப்பு   நடத்தினார்   ஹிட்லர்.    
இரவில்   கூட.  மண்ணெண்ணை    
விளக்கு   வெளிச்சத்தில்   
ஓவியங்கள்   வரைவார்.    
சில   மாடல்   அழகிகளை   வைத்து    
ஹிட்லர்   வரைந்த   படங்கள்,    
நல்ல   விலைக்குப்   போயின.    
அதனால்   சொந்தமாக   ஒரு    
ஓவியக்கூடம்   அமைத்தார்.    
இந்தச்   சமயத்தில்,   சிந்தியா    
என்ற   பெண்ணை   ஹிட்லர்   காதலித்தார்.    
காதல்   தோல்வி    அடைதார்,    
இக்காலக்கட்டத்தில்   ஹிட்லர்    
நாடோடியாக   திரிந்தார்.






தெருவோர   டீக்கடைகளில்    
நாளிதழ்களை   ஒருவரி   விடாமல்    
படிக்கும்   பழக்கம்   அப்போதுதான்    
தோன்றியது.     
அவருக்கு   அரசியல்   ஈடுபாடு    
உருவானதும்   அப்போதுதான்    
தான்   வரைந்த   ஓவியங்களை    
விற்று   காலத்தை   ஓட்டினார்.    
இது   வரையிலும்   அவருக்கு    
இது   வரையிலும்   அவருக்கு    
ஒரு   நண்பன்   கூட    கிடைக்கவில்லை.    
ஏனெனில்   யாரிடமும்   அவர்   பேசாமல்    
அவர்   எப்போதும்   இறுக்கமாகவே    
இருப்பது   தான்   காரணம்.






பணம் கரைந்தது.  பிழைக்க வழி தேடி ஜெர்மனிக்கு வந்தார்.  வாழ்வில் எதாவது சாதித்து சிறிய அளவிலாவது 'ஹீரோ' ஆகவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது  அப்போதுதான்.  ஓவியராக முடியவில்லை.  ராணுவத்திலாவது சேரலாம் என்றெண்ணி ஜெர்மனிய ராணுவத்தில் சேர்ந்தார்.  அப்போது அவருக்கு வயது இருபத்தைந்து.  முதல் உலகப்போர் தொடங்கிய சமயம் அது.
1914-ல் தொடங்கி, 1918 வரை நடந்த முதல் உலகப் போரின் போது ஜெர்மனி ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.







அங்கே அவருக்கு 'ரன்னர்' பணி தரப்பட்டது.
முன்னணியில் போரிடும் வீரர்களுக்கு தகவல்களையும் கட்டளைகளையும் சுமந்து ஓடிச் சென்று தருவதுதான் 'ரன்னர்' பணி.  துப்பாக்கிக்குண்டுகள் பொழிய, வெடிகுண்டுகள் முழங்கிடும் போர்க்களத்தில், தனது வீரத்தை வெளிக்காட்ட இதுதான் சமயம் என்று ஹிட்லர் வெறி பிடித்ததை போல ஓடினார்.






ஆச்சரியம் என்னவென்றால் ஒரு குண்டு கூட அவர் மேல் படவில்லை என்பதுதான்.  அவர் துணிவையும் கடமை உணர்வையும் பாராட்டி, ராணுவம் அவருக்கு 'Iron Cross' என்னும் பதக்கம் அணிவித்துக் கௌரவம் செய்தது.
ஆனால், உலகப்போரின் போது எதிரிகளால் 'மஸ்டர்ட்' வாயு வீசப்பட்டதால் ஹிட்லரின் ஒரு கண் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. நுரையீரலும் பாதிக்கப்பட மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அந்த சமயத்தில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் சரண் அடைந்தது.





மருத்துவமனையில் இருந்த ஹிட்லர் 'துரோகம் இது' என்று ஓலமிட்டவாறு கதறி அழுதார். "கம்யூனிஸ்ட்களும் யூதர்களும் தான் ஜெர்மனியின் தோல்விக்கு ரகசியமாக வேலை செய்தார்கள். அவர்களை அழிக்காமல் விடமாட்டேன்!" என்று தனது மனதில் அவர்களின் மேல் உள்ள வெறுப்பை முதன்முறையாக வெளிப்படுத்தி கர்ஜித்தார் ஹிட்லர்.





மருத்தவமனியில் இருந்து வெளிவந்த ஹிட்லர் புதிதாக தொடங்கப்பட்டிருந்த 'தேசிய சோசியலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சி' யில் உறுப்பினராகச் சேர்ந்தார். அப்போது அந்த கட்சியின் உறுப்பினர் பலமே சில நூறு தான்.  அந்த கட்சியின் ஜெர்மனி மொழியின் சுருக்கமே 'நாஜி'. இதுவே உலக சரித்தரத்தின் சக்தி வாய்ந்த இரு எழுத்தாக பின்னாளில் மாறியது. மாலை நேரங்களில் யார் வீட்டு மாடியிலாவது கூடி, அரசை திட்டித் தீர்ப்பதுதான் அந்தக் கட்சியின் பொழுதுப்போக்காக இருந்தது.






1920, பிப்ரவரி 29 ம் தேதி, அந்தக்கட்சியின் முதல் பொதுக்கூட்டம் நடந்தது. ஹிட்லர் தனது முதல் உரையை தொடங்கினார். உணர்ச்சிப் பிழம்பாய், உடல் நடுங்க, கண்கள் கலங்க, ஆவேசப் பெருக்கோடு அவர் ஆற்றிய உரையில் மொத்த மக்கள் கூட்டமும் உணர்ச்சிவசப்பட்டு பரவசத்துடன் ஆராவாரம் செய்தது. அன்று அந்த பெருங்கூட்டத்தை முழுமையாக ஆக்கிரமித்தார் இளம் தலைவர் ஹிட்லர். அவரின் சக்தியை அவரே உணர்ந்த தினம் அது.






அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஹிட்லரின் உரையை கேட்பதற்காகவே பல்லாயிரக் கணக்கானவர்கள் திரண்டனர். உலகின் மிகச்சிறந்தவர்கள் ஜெர்மனியர்கள் என்ற பெருமிதத்தை அவர்களிடம் விதைத்தார் ஹிட்லர். 'ஸ்வஸ்திகா' சின்னத்தை கட்சியின் சின்னமாக பயன்படுத்தினார்.
அரசாங்கத்தின் நிர்வாகத்திறமை இன்மையால்தான் நாட்டில் வறுமையும், வேலை இல்லாத்திண்டாட்டமும் பெருகிவிட்டதாகப் பிரசாரம் செய்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு, ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். ஆனால், அந்த முயற்சியில் தோல்வி அடைந்தார்.





1923 -ல், அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்ததாக ஹிட்லரையும் அவரது சகாக்களையும் சிறையில் அடைத்தது ஜெர்மன் அரசு.  ஹிட்லருக்கு முதலில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அது ஓராண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டது. முதல் பொதுக் கூட்டம் நடத்திய மூன்று ஆண்டுகளில் ஒரு கட்சி ஆளும் அரசையே பயமுறுத்தும் அளவிற்கு உயர்ந்தது ஹிட்லரால் தான் என்றால் அது மிகை இல்லை. சித்தாந்தமில்லாத தனது கட்சிக்கு ஹிட்லர் சித்தாந்தத்தை உருவாக்கியது அப்போதுதான்.
சிறையில் இருந்தவாறு 'எனது போராட்டம்' ( Mein kampf ) என்ற நூலை சிறையில் இருந்தபோது எழுதினார். இது உலகப் புகழ் பெற்ற நூல். 'இனம்' என்ற விஷயத்தை மூலதனமாக பயன்படுத்த தொடங்கியதும் அப்போது தான்.






அந்த புத்தகத்தில் உலகை வழிநடுத்தும் தகுதி உடையவர்கள் ஜெர்மானியர்கள் மட்டும்தான் என்று முழங்கினார் ஹிட்லர். யூதர்களையும் கம்யூனிஸ்ட்களையும் மிகக் கேவலமாக தனது புத்தகத்தில் சாடினார். யூதர்கள், ரஷ்யர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத ஒரு புது யுகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆபத்தான கருத்தை முன்வைத்தார். மற்றவர்களையும் தனது கருத்திற்கு உடன்பட வைத்தார். அந்த சமயம், இந்தியா பிரிட்டனின் காலனியாக அடிமைபடுத்தப் பட்டிருந்தது. ஹிட்லர் தனது புத்தகத்தில், ரஷ்யா ஜெர்மனியின் இந்தியாவாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.






1928-ல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வி அடைந்தது. ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை. தன்னுடைய கட்சியின் பெயரை "நாஜி கட்சி" என்று மாற்றி நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார். அவருடைய இடைவிடாத உழைப்பும், பேச்சுவன்மையும், ராஜதந்திரமும் வெற்றி பெற்றன. ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து, பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






ஹிட்லரின் பேச்சாற்றலால் கட்சி வியக்கத்தக்க வேகத்தில் வளர்ந்தது. ஆயினும் ஜனாதிபதி தேர்தலில் ஹிண்டன்பெர்க் என்னும் மூத்த தலைவருக்கு எதிராக போட்டியிட்டு தோற்றார். ஆனால் ஹிண்டன்பெர்க் கட்சியினருக்கு ஆட்சியமைக்க நாஜி கட்சியினரின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே கூட்டணி அரசில், ஹிட்லருக்கு 'சான்சலர்' பதவி கிடைத்தது. அதிபருக்கு அடுத்த அதிகாரம் கொண்ட பதவி. ஆனால் ஹிட்லரிடம் இருந்த பயத்தின் காரணமாக அதிகாரங்கள் குறைக்கப்பட்டே தரப்பட்டது.
அந்த சமயம் பாராளுமன்றக் கட்டிடம் கொளுத்தப்பட்டது. ஜனாதிபதியாக இருந்த ஹிண்டன்பர்க், மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்தார்.  1933-ஜனவரி 30-ந்தேதி ஹிட்லரை அழைத்துப் பிரதமராக நியமித்தார். கம்யூனிஸ்ட்களே இதற்கு காரணம் என்று முழங்கி, அவர்களை அடக்க அதிகாரங்களை பெற்றுக் கொண்டார்.






அன்று முதல் ஹிட்லருக்கு ஏறுமுகம்தான். பிரதமராக இவர் பதவி ஏற்ற 1 வருடத்தில் ஜனாதிபதி ஹிண்டன்பர்க் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக் கொண்டு, எதிர்ப்பாளர்களை எல்லாம் ஒழித்துவிட்டு, ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார் ஹிட்லர்.
ராணுவ இலாகாவையும், ராணுவ தளபதி பதவியையும் தானே எடுத்துக்கொண்டார். அரசியல் கட்சிகளை எல்லாம் தடை செய்தார். பாராளுமன்றத்தைக் கலைத்தார்.





எதிரிகளைச் சிறையில் தள்ளினார். "இனி ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என்று அறிவித்தார். யூதர்களை அடியோடு அழிக்கவேண்டும் என்று முடிவு செய்து, ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கைது செய்து, சிறையில் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து கொன்றார். பலர் இருட்டறைகளில் அடைக்கப்பட்டு, விஷப் புகையால் கொல்லப்பட்டனர். தினமும் சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் விஷப்புகையிட்டுச் சாகடிக்கப்பட்டனர்.
ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம். முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்குக் காரணமான பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பழிவாங்க வேண்டுமென்று திட்டமிட்டார். ராணுவத்தைப் பலப்படுத்தினார்.






ஜெர்மனியின் தரைப்படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் உலகின் சிறந்த படைகளாக உருவெடுத்தன. உலகத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நேரம் நெருங்கிவிட்டதாக நினைத்தார் ஹிட்லர். 1939-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி, எந்தவிதப் போர்ப் பிரகடனமும் வெளியிடாமல் போலந்து நாட்டின் மீது படையெடுத்தார் ஹிட்லர்.
பிரிட்டனும், பிரான்சும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்ப் பிரகடனம் வெளியிட்ட போதிலும், போரில் நேரடியாக குதிக்கவில்லை. இதனால், இரண்டே வாரங்களில் போலந்தைக் கைப்பற்றிக் கொண்டது ஜெர்மன் ராணுவம். இந்தச் சமயத்தில் ஹிட்லருடன் நட்புக் கொண்டார் இத்தாலி சர்வாதிகாரி முசோலினி.






ஜப்பான் உள்பட வேறு சில நாடுகளும் ஜெர்மனியுடன் கைகோர்த்துக் கொண்டன. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ஒரு ரகசிய ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. ஆசியப் பகுதிகளை ஜப்பானும், ஆப்பிரிக்காவை இத்தாலியும், ஐரோப்பிய பகுதிகளை ஜெர்மனியும் தாக்கிக் கைப்பற்றவேண்டும் என்பதே அந்த ரகசிய ஒப்பந்தம்.  ஹிட்லரின் போர் வெறி, அவருடைய நாஜி கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பை உண்டாக்கியது. அதனால், அவரை கொலை செய்ய அவருடைய தளபதிகளே சதித்திட்டம் தீட்டினார்கள். இவர்களுக்குத் தலைவர் கர்னல் வான் ஸ்டப்பன்பர்க்.





1944 ஜுலை 20-ந்தேதி தன்னுடைய தலைமை அலுவலகத்தில் தளபதிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார், ஹிட்லர். அவர் முன் இருந்த மேஜை மீது தேசப்படம் விரிக்கப்பட்டிருந்தது. எந்தெந்த இடத்தை எப்படித் தாக்கவேண்டும் என்று ஹிட்லர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஹிட்லரின் கால்களுக்கு அருகே ஒரு "சூட்கேஸ்" இருந்ததை மெய்க்காவலர் ஒருவர் பார்த்தார். "இது இங்கு எப்படி வந்தது? யார் வைத்தது?" என்று அவர் மனதில் கேள்விகள் எழுந்தது. சந்தேகம் தோன்றியது. பெட்டியை தள்ளிவிட்டார்.
தரையில் 'சர்' என்று சரிந்து சென்ற பெட்டி, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஹிட்லர் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. நாலாபுறமும் புகை மண்டலம் சூழ்ந்தது. புகை அடங்கியவுடன் பார்த்தால், இடிபாடுகளுக்கு இடையே 4 அதிகாரிகள் செத்துக் கிடந்தனர்.
மயிரிழையில் உயிர் தப்பிய ஹிட்லருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தன.





குண்டு வெடித்த இடத்துக்கும், ஹிட்லருக்கும் இடையே ஒரு மேஜை இருந்ததால் அவர் தப்பினார். மெய்க்காவலர் சந்தேகப்பட்டு பெட்டியை தள்ளி விடாமல் இருந்திருந்தால், நிச்சயம் ஹிட்லர் பலியாகியிருப்பார். இந்த சதியையொட்டி, 5 ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவ்வளவு பேருக்கு தூக்கு மேடை கிடைக்காததால், விளக்குக் கம்பங்களிலும், மரங்களிலும் பலர் தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட்டனர்.
கறிக்கடையில் மாமிசத்தை தொங்கவிடப்படுவதற்காக உள்ள கொக்கிகளில், வயர்களைக் கட்டி, அதில் பலர் தூக்கில் மாட்டப்பட்டனர். கர்னல் ஸ்டப்பன்பர்க்குக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இன்னொரு தளபதியான ரோமெல் என்பவரும் இந்த சதியில் சம்பந்தப்பட்டிருந்தார். குண்டு வெடிப்பில் அவரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். குணம் அடைந்ததும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.






அவர் கடைசி காலத்தில் இப்படி ஹிட்லருக்கு எதிராகத் திரும்பினாலும், முதலில் ஹிட்லருக்கு பக்கபலமாக இருந்தவர். ஆகவே ஹிட்லரின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. "அவரை தூக்கில் போட வேண்டாம்" என்றார், கருணை தேய்ந்த குரலில். ரோமெல் அதிர்ஷ்டசாலி, அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்போகிறார் ஹிட்லர் என்று எல்லோரும் நினைத்தனர். "அவருடைய பழைய சேவையை நினைத்துப் பார்த்து கருணை காட்டுகிறேன். அவரை சுட்டுக் கொல்லவேண்டாம்; தூக்கிலிடவேண்டாம். விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள்!" என்று கூறினார், ஹிட்லர்! அதன்படி அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டார் ஹிட்லர்.






சர்வதிகாரிகளின் ஆட்சிக் காலத்தில் ஆபாச அத்துமீறல்கள் அதிகமாகவே இருக்கும்.  ஆனால் ஹிட்லர் அத்தகைய ஆபாசங்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.  ஒரு விபசார விடுதி கூட அவரின் ஆட்சிக்காலத்தில் இல்லை என்பதே மிகப் பெரிய சாதனை அல்லவா..!





"விபச்சாரம் பிளேக் நோய் போன்றது. சிறிதும் தயவு காட்டாமல் அது அழிக்கப்பட வேண்டும். சமுதாயத்தின் அழுகிப் போன பகுதிகளை நாம் சுத்தப்படுத்த வேண்டும். இலக்கியம், சினிமா, கலை, பத்திரிக்கைகள், சுவரொட்டிகள், கடைகளின் 'ஷோகேஸ்'கள் அதிலும் ஆபாசம் இருக்க, நான் அனுமதிக்க மாட்டேன்!" என்று எச்சரித்தார் ஹிட்லர்.
வெள்ளைத்துணியில் உள்ள கறுப்புக் கரைகளே நம் கண்களை ஈர்க்கும். அதே போன்று, ஹிட்லரின் தவறுகளால், அவரை பற்றிய நினைவுகள் உலக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட போது, அவரின் சாதனைகளும் கூடவே மறக்கப்பட்டுவிட்டன.





1035 பக்கங்கள் கொண்ட 'அடால்ப் ஹிட்லர்' என்ற புத்தகத்தை எழுதிய பேராசிரியர் ஜான் டோலேன்ட், "ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நாலாவது ஆண்டில் எதாவது காரணத்தால் இறந்திருந்தால், உலகமே ஹிட்லரை "ஜெர்மனியின் சரித்தரத்தில் தோன்றிய மிகச் சிறந்த மாமனிதன் என்று பாராட்டியிருக்கும்!" என்று கூறுகிறார். அவரின் சாதனைகளில் சிலவற்றை பார்ப்போம்.





முதல் உலகப்போரால் வாடி வதங்கி போயிருந்த ஜெர்மனியின் பொருளாதாரத்தை ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் தூக்கி நிறுத்தியவர் ஹிட்லர். ஹிட்லர் பதவியேற்ற 1933ல் ஜெர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 60 லட்சம். ஆனால் 1936 ல், அதாவது மூன்றே ஆண்டுகளில், ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவானது.  இத்தனைக்கும் பொருளாதார அறிவு சிறிதும் ஹிட்லருக்கு இல்லை. இந்த சாதனைக்கு காரணம், ஹிட்லரால் தேடிக் கண்டுப்பிடிக்கப்பட்ட ஜால்மர் ஷ்ஹாக்ட் என்ற பொருளாதார ஜீனியஸ் ஆவார்.






ஜால்மர் ஷ்ஹாக்ட் ஒன்றும் முன்னணித் தலைவரில்லை.  ஆயினும் அவரது திறமையை உணர்ந்திருந்த ஹிட்லர் அவரை பொருளாதார அமைச்சராக நியமித்து இத்தகைய சாதனையை புரிந்தார். திறமைக்கு மரியாதை கொடுத்து பதவியை கொடுப்பவனே சிறந்த தலைவன். நமக்கு எப்போது அத்தகைய தலைவன் கிடைப்பான் என்று யூகிக்க கூட முடியவில்லை.
ஹிட்லரின் ஆட்சியில் வேலைக்கேற்ற ஊதியம், போனஸ், விலைவாசி எல்லாம் கட்சிதமாக நிர்ணயிக்கப்பட்டது. படு வேகமாக கார்கள் போவதற்கு மிக நீண்ட 'ஹைவேஸ்' (Auto Bahn) உலகில் முதலில் கட்டப்பட்டது, ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில்தான்.





முதியவர்களுக்கு பென்ஷன் மற்றும் இலவச வைத்தியம், எல்லோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் எல்லாம் படுவேகமாக நடைமுறைக்கு வந்தன.
"சாமான்யர்களும் காரில் பயணிக்க வேண்டும். அவர்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு கார்கள் தயாரிக்கப்பட வேண்டும். ஒரு காலன் பெட்ரோலுக்கு அது நாற்பது மைல் போக வேண்டும்" என்று Porsche கார் நிறுவனத்தின் அதிபர் 'பெர்டினான்ட் பொர்ஷ்'-ஐ கூப்பிட்டு சொன்னார் ஹிட்லர். பின் பகுதியில் இஞ்சின் அமைப்புடன் தயாரிக்கப்பட்ட அந்த மினி கார்களுக்கு 'வோக்ஸ்வேகன்' என்று பெயரிடப்பட்டது. பிற்காலத்தில் அந்தக் கார்கள் உலகப் புகழ் பெற்றது.






தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு அடையக் கூடாது அன்று ஹிட்லர் சட்டம் கொண்டுவர, அத்தனை தொழிற்ச்சாலைகளும் அதற்கான Anti - Pollution சாதனங்களையும் ஃபில்டர்களையும் பொருத்திக் கொண்டது. அதனால் ஜெர்மனியில் ஓடிய நதிகள் அத்தனையும் படு சுத்தமாக இருந்தது.  பல வலி நிவாரணிகளும், போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து வெளிவர  உதவும் மருந்துகளும், ஹிட்லர்-இன் கடும் முயற்சியால் கண்டுப் பிடிக்கப்பட்டன.






ஹைபோதேர்மியா என்னும் உடல் வெப்பத்தை குறைத்திடும் ஒரு நோயிற்கு தீர்வைக் கண்டது ஹிட்லர்-இன் ஜெர்மனிய மருத்துவர்கள் தான். இவ்வாறு மருத்துவத்துறையில் வியத்தகு முன்னேற்றம் அடைந்தது ஜெர்மனி.
பெண்களுக்கு ராணுவத்தில் பலப் பணிகளில் இடம் தந்து பெண்ணுரிமை காப்பதில் தலை சிறந்து விளங்கினார்.  பெண்களை எப்போதும் தாழ்வாக நினைத்தது இல்லை ஹிட்லர். இப்போதுள்ள மிருகவதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தவர் ஹிட்லர். தன் தாயிடமும், மனைவியிடமும், குழந்தைகளிடமும் அன்புக் காட்டும் மனிதராக திகழ்ந்தார்.
குழந்தைகளுக்கு பிடித்த மனிதராக திகழ்ந்தார் ஹிட்லர்.






பல எதிரி நாடுகளை, கத்தியும் இன்றி, உயிர் சேதமும் இன்றி, தனது சமயோசிதப் புத்தியாலும், தந்திரத்தாலும் வெற்றிக் கொண்டவர் ஹிட்லர். அதற்கு அவரின் குறுக்கு புத்தியும், எதிரியை கணித்திடும் ஆற்றலும் பெரிதும் உதவி செய்தன.
ஹிட்லர்-இன் காலத்தில் அவரின் பெரும் முயற்சியால் ஜெர்மனி ராணுவத் தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்திருந்தது. போரில் ஜெர்மனி தோல்வியடைந்த பின் ஜெர்மனியின் ராணுவத்தொழில்நுட்ப வல்லுனர்களையும், விஞ்ஞானிகளையும், அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் பங்குப் போட்டு பிரித்துக் கொண்டனர். அவர்களே இப்போதைய 'நாசா' வின் இத்தகைய வளர்ச்சிக்கு காரணமாக இருந்தனர் எனக் கூறுவோரும் உள்ளார்.






ஒரு தலைவனின் கடமை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதும், வேலையில்லாமையை ஒழிப்பதும், இந்நாட்டை சேர்ந்தவன் நான் என்று பெருமிதமாக கூறிகொள்ளும் நிலைமையை உருவாக்குவதுவுமே ஆகும். ஹிட்லர் தனது ஆட்சிக் காலத்தில் அத்தகைய தலைவனாக திகழ்ந்தார் என்பதில் சந்தேகமே இல்லை.
ஹிட்லர் காலத்தில் எந்த தொழிற்ச்சாலையிலும் சம்பளப் பிரச்னை, வேலைநிறுத்தம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது. முதலாளி பக்கமும் அவர் செயவில்லை. தொழிற்ச் சங்கங்களுக்கும் அவர் ஆதரவு தரவில்லை. முதலாளி பிரச்னை செய்தாலும், தொழிலாளிகள் தவறு செய்தாலும், இரு தரப்பினரையும் சிறையில் தள்ளினார்.   சர்வாதிகாரியாக இருந்தததால் ஹிட்லரால் இந்தக் கண்டிப்பைச் சுலபமாக காட்டி, பிரச்னையை முடிக்க முடிந்ததது என்பதும் உண்மைதான்.



           



                                                   தொடரும்.........







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்